
இயற்கையை நேசிக்கும், இரசிக்கும் இந்த மனிதன், சக மனிதரின் அபாரமான திறன்களையும் கண்டு தினம் தினம் வியக்கிறேன். இவ்வுலகத்தை யார் படைத்தார் என்பது வினாக்குறியாகவே இருக்கிறது. ஏதோ ஒரு சத்திதான் படைத்தது என்றால், அந்த சத்தியே கண்பிதுக்கும் அளவுக்கு மனிதனின் சாகசங்கள் வளர்ந்து கொண்டு போகின்றன. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதை சற்று மாற்றி ஆக்கமும் மனிதனாலே, அழிவும் மனிதனாலே என்று சொல்லலாம். மனிதனின் ஒவ்வொரு படைப்பும் ஒரு வகையில் உலகை பாதித்தாலும் சில அல்லது பல வேளைகளில் பிறரை ஊக்கப்படுத்துவதோடு உல்லாசப்படவும் செய்கிறது.

வெங்காயம் உறிக்கும் கருவி முதல் வெண்மேகங்கள் உருவாக்கும் வசதி வரை அனைத்தையும் படைத்து அசத்துகிறான். நான் கடவுள் என்று இவன் மார்தட்டிக்கொள்ளலாம். உனக்கு மேல் ஒரு சத்தி இருக்கிறது என்பதை அடிக்கடி உணர்த்தும் வகையில் இயற்கையின் சீற்றம் இறக்கை விரித்தாலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாய் திரும்பத் திரும்ப வானோக்கி உயர்கிறான்.
அப்படி அவன் அசத்திய அற்புதங்களில் நான் அதிகம் இரசிப்பது மனிதனின் கட்டுமானத் திறனைதான். ஒரே அளவிலான பாறைகளை நேர்த்தியாகச் சற்றும் பாகை அளவு சிதையாமல் எப்படித்தான் கனத்தை மேலேற்றினான் என இன்றும் வியக்க வைக்கும் பிரமிடை உருவாக்கியவர்களை என்னவென்றுச் சொல்வது? அப்போதே அந்தளவுக்குச் சிந்திக்கும் திறனைக் கொண்டவர்களின் குருதி இன்னமும் இவ்வுலகில் ஆங்காங்கே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நிழல் விழாத கோவில், விண்ணைத் தொடும் கோபுரங்கள், புயலில் சரியாக் கட்டடங்கள் என சதா சாதித்துகொண்டுப் போகும் இவனது பாதையில் என்னை நில், கவனி எனச் செய்தது இரு நிலங்களை இணைக்கும் பாலங்கள்.

இராமாயணத்தில் இலங்கையை நோக்கியப் பாலமானது மெய்யானது எனச் சொல்கிறார்கள். இருந்தால் நலம். ஆனால் இன்று கண்கூட காணமுடிந்த பாலங்கள் அற்புதமானவை. அவற்றில் ஒன்று டென்மார்க்கையும் சுவிடனையும் இணைக்கும் ஓரேசண்டு பாலமாகும். 2 சூலை 2000 இல் துவங்கப்பட்ட இதன் நீளம் 7,845 மீட்டராகும். இப்பாலத்தில் அதிசயிக்க வேண்டியது என்னவென்றால் இஃது இரட்டை தண்டவாளங்களையும் நான்கு வழி சாலையையும் ஒன்றிணைந்த சுரங்கப் பாலமாகும். மேலுள்ளப் படம் குழப்பம் விளைவித்திருந்தால் கீழுள்ளப் படம் அதைத் தெளிவுபடுத்தும்.


எதற்கு முழுப்பாலத்தையும் கடலின் மேற்பரப்பில் கட்டாமல் பாதியைக் கடலின் கீழ் சுரங்கப்பாலமாகக் கட்டி அலட்டிக்கொள்கிறார்கள் என்று பதறாதீர். டென்மார்க்கின் தலைநகரான கோப்பென்ஹேகனில் உள்ள விமானத்தளத்தில் (கடற்கரையோரம்) விமானங்கள் தரையிரங்க வசதியாக அமையவும் வணிகக் கப்பல்கள் தடையின்றி மிதந்து செல்லவும் வழிவகுக்கவே இப்பாலத்தின் அமைப்பு இப்படியுள்ளது.

இப்பாலம் இரு வெவ்வேறான நாட்டை இணைக்கிறது என்றாலும் இப்பாலத்தினூடேச் செல்லும் பயணிகளுக்கு 'SCHENGEN' ஒப்பந்தப்படி கடப்பிதழ் சோதனை கிடையாது. 1995 இல் ஆரம்பித்து 1999 இல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பாலத்தில் உயர்வான டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் முதலில் அதிக வரவேற்பு கிட்டவில்லை என்றாலும் 2005 முதல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்னொரு வியப்பான செய்தி என்னவெனில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்டு வெடிக்காமல் போன 16 குண்டுகள் அக்கடல் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதால் பாலத்தின் கட்டுமானப் பணி 3 மாதங்கள் தாமதித்தது. இச்சுரங்கப் பாலத்தில் வாகனங்கள் தவிர மின்தொடர்வண்டியும் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாலத்தைப் பற்றி மேலும் விபரங்கள் wikipedia வில் உள்ளன. இது போன்ற வேறு பாலங்களைப் பற்றி அடுத்தடுத்த இடுகையில் பகிர்கிறேன்.

0 comments:
கருத்துரையிடுக