ஞாயிறு, 11 ஜூலை, 2010

தடம் பதித்தவை 1




இப்பூவுலகில் பிறந்த அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும்....ரொம்பப் பழைய கட்டுரை அமைப்புப் போல உள்ளதா? சரி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- பிறந்த பின்னர், யாதும் ஊரே யாவரும் கேளீர் என கலைஞர் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்பது உங்கள் உணர்வைப் பொருத்தது.


அவ்வரிகளுக்கும் இந்த இடுகைக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. ஆனால் யாதும் ஊரே என்பதற்கொப்ப எல்லா ஊரிலும் என் தடமிருக்க வேண்டும் என்ற பேராசை எனக்குண்டு. நான் தொடக்கப்பள்ளியில் பயிலும்போது கோலாலும்பூர் எனும் ஊரானது எனக்கு ஏதோ அயல்நாடு போன்றதொரு தோற்றமளித்தது. 1982- 1989 வரை செர்சோனீஸ் தோட்டத்தைப் பிறப்பூராகவும் (இன்றுமதுவேயென் பிறப்பூர்) வாழ்வைத் தொடங்கிய, தொடக்கிவைத்த நற்பேறு கொண்ட மண்ணாகவும் கொண்டிருந்த எனக்கு கோலாலும்பூர் மட்டுமல்ல, என் மாநிலத்திலுள்ள ஈப்போ கூட அயல்நாடே. என் அப்பா என்னைத் தைப்பூசத்துக்கு அழைத்து சென்ற அழகைக் கவனியுங்களேன்.








  • வீட்டிலிருந்து படகுதுறை வரை மிதிவண்டி


  • சிறிய ஆற்றைக் கடக்க படத்தில் காணப்படும் படகு (ferry)


  • கோலக்குராவிலிருந்து பாரிட் புந்தாருக்கு பேருந்து


  • அங்கிருந்து பட்டர்வொர்த்துக்கு மற்றொரு பேருந்து


  • கடலைக் கடக்க இன்னொரு படகு (ferry)


  • அங்கிருந்து கோயிலுக்கு மேலுமொரு பேருந்து


இது அன்றைய நிலை; இன்றைய நிலை வேறு என்றும் முற்றாகச் சொல்லிவிட இயலாது. இன்றும்கூட நம் நாட்டில் சில மாணவர்கள் அனுதினமும் பள்ளிக்குச் செல்லவே அல்லல்படுகின்றனர்.



ஆயினும் இன்று அந்தத் தோட்டத்திலிருந்து சற்றே தொலைவில் வாழுமெனக்கு சிறுவயதிலிருந்த எண்ணமும் செயலும் அநேகமாக மாறிவிட்டது. நாளைக்கு கோலாலும்பூர் செல்லவேண்டுமென்றாலும் எந்தவொரு சிக்கலுமில்லை. விரிந்த சாலையில் விரைந்து செல்ல வாகன வசதியோடு வாழும் நான், மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் மயில்வாகனனின் மற்ற பெயர்களைச் சூட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளும் வாங்கித்தந்துவிட்டு தனக்கு மட்டும் ஒரு மிதிவண்டியையே கடைசி மூச்சு வரை வாகனமாகப் பயன்படுத்திவிட்டு மறைந்த என் தந்தையை இக்கணம் நினைத்துப் பார்க்கிறேன்.



(1 நிமிடத்திற்குப் பிறகு) இன்று மற்ற இடங்களுக்கு அலுவலாகச் செல்வதோ அளவளாடச் செல்வதோ மாபெரும் சவாலில்லை. எல்லா வசதிகளும் உண்டு. நமக்கு வேண்டியது பணம் மட்டுமே. அதுவும் ஏர் ஆசியா இருக்கையில் யார் வேண்டுமானாலும் பறக்கலாம் (everyone can fly). அப்படி நான் சென்ற, செல்ல விரும்பும், செல்லப்போகும் இடங்களைப் பற்றியப் பதிவே இது.







அப்ப இவ்ளோ நேரம் கதைக்கே வரல்லியா நீ என்கிறீர்களா? என்ன செய்வது, நமது தொழில் அப்படி. எதுவாகயிருந்தாலும் பீடிகை பலமாக இருக்கவேண்டுமே. நான் முதன்முதலாக தடம் பதித்த இடமென்று எதைச்சொல்வது... என்னம்மாவின் வயிறுதான் என்றால் மறுபடியும் பீடிகையா என்பீர்கள். அந்த நாடு இந்த நாடு என்று எல்லா நாட்டையும் பார்த்தாக வேண்டுமென்று எல்லாருக்கும் கனவு இருக்கும், ஆனால் நம் நாட்டிலுள்ள அற்புதங்களை முதலில் பார்த்து தீர்க்கவேண்டும் என்பது எனது வெறி. அப்படி பார்க்கையில் நான் ஐந்தாம் ஆண்டு பயில்கையில் பினாங்கு தீவை சக நண்பர்களோடு வலம் வந்தேன். அதன் ஆதாரங்கள் நினைவுகளில் மட்டுமே. பிறகு மேற்படிப்பு காலத்தில் நிறைய இடங்களுக்குச் சென்ற அனுபவம் உண்டு. காதலில் விழுந்தபின்னர் கனவுந்து ஓட்டுநரின் மகளை யார் கண்ணிலும் படாமல் அழைத்துகொண்டு சில இடங்களுக்குச் சென்றதுண்டு. இன்று அவர் மகளை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல அனுமதி அட்டை உண்டு (கல்யாணம் ஆயிடுச்சுப்பா) ஆனால் கனவுந்து ஓட்டுநர் இல்லை.






அவ்வாறான எனது பயணத்தில் அண்மையில் நான் சென்று தடம் பதித்த இடம் அனைவருக்கும் தெரிந்த கேமரன் மலை. ஈப்போவிலிருந்து ஏறத்தாழ 2 மணிநேர பயணத்திற்குப் பின்னர் சென்றடைந்தோம். வளைந்துநெளிந்த பாதைகள் மீண்டும் இங்கு வராதே என்ற எண்ணத்தை எனக்குள் உண்டுபண்ணியது.



ஆறேழு வருடங்களுக்கு முன்னர் அங்குச் சென்றிருந்த என்னவளின் கூற்றுக்குப் பயந்து குளிராடைகளை உடன் எடுத்து சென்றிருந்தோம். ஆனால் மதியவேளையில் மழை பெய்துகூட அவ்வளவாகக் குளிரவில்லை. சில கவரும்படியான இடங்களில் கட்டணம் வசூலித்தார்கள். அதில் ஓரிடத்திற்கு இன்னமும் கேட்டிருந்தால்கூட கொடுத்திருக்கலாம். இன்னொரிடத்திற்கு கட்டணம் என்பது அவசியமா என்றிருந்தது. தேயிலைக்குப் புகழ்பெற்ற அவ்விடத்தில் தேநீரின் விலையும் அதிகமாகவே பட்டது. இவை அங்கு என்னைக் குமுறச் செய்தவை. அதேவேளை என்னை நிமிரச் செய்யவும் சில இடங்கள் பங்காற்றின.




ரோசாப்பூத் தோட்டம். ஏறிச்செல்லும்படி உயரமான இடத்தை நோக்கி அமைத்துள்ளார்கள். களிப்பில் களைப்புத் தெரியவில்லை. ஒவ்வொரு பூக்களும் கண்ணாப்பிண்ணாவென்று தழைத்து வளர்ந்திருந்தன. இவ்வளவு பெரிய பூக்களும் உள்ளனவா என்று திகைக்கவில்லை நான். காரணம் உலகிலேயே மிகப்பெரிய பூ (10 கிலோகிராம் எடையுள்ளது) நம் நாட்டில்தான் உள்ளது என்பதில் பெருமைகொள்பவன் நான். அது என்ன பூ என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆயினும் பெரிய பெரிய வித்தியாசமான பூக்களை நேரில் பார்க்கும்போது சற்று திக்குமுக்காடித்தான் போனேன்.







வண்ணத்துப் பூச்சி பூங்காவில் 10 வண்ணத்துப் பூச்சிகள்தான் இருந்திருக்கும் என்றாலும் வேறுசில விந்தையான பூச்சியினங்கள் அவ்விடத்தை அலங்கரித்தன. இலை வடிவிலான பூச்சியினத்தை அங்குதான் கேள்வியுற்றேன். மற்ற பூச்சிகளை விவரிப்பதைவிட நேரில் காண்பதே சுகம். தமிழருக்கு சொந்தமான தேயிலைத்தோட்டம், ஸ்ட்ராபேரிப் பழத்தோட்டம், தங்கும் விடுதிகளைக் காண்கையில் நானும் தமிழனென்ற கர்வம் மேலோங்கியது. உன் பெருமை மேலும் ஓங்குக.



கேமரன் மலை என்பது மலேசியர்களைப் பொருத்தமட்டில் அதுவும் என்னைப் போன்ற வடப்பகுதியைச் சார்ந்தவர்களுக்கு மிகப் பரிட்சியம் பெற்ற ஓரிடமாகும். ஆனால் நான் அண்மையில்தான் முதன்முதலாக அங்கு சென்று வந்தேன். இப்போது நானும் கேமரன் மலை பற்றி அறிவேன் என்று பெருமையாகச் சொல்லி கொள்ளலாம்.


0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates