புதன், 14 ஜூலை, 2010

டப்பா

மேலேயுள்ள பொருள் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? பார்ப்பதற்கு ஏதோ ஒரு வாகனத்தின் உபரிப்பாகம் போன்று தோற்றமளிக்கும் இப்பொருள் உண்மையில் என்னவாக இருக்குமென்று எனக்கும் தெரியாது. ஆனால் எதனால் செய்யப்பட்டது என்பது தெரியும். இன்றைய வாழ்க்கையில் இப்படத்தில் உள்ள பொருளை உருவாக்கிய மூலப்பொருளானது நாம் தினசரி அல்லது மாதத்தில் ஒருநாளாவது சந்திக்கக்கூடிய ஒன்றுதான்.


இந்த இடுகையில் நான் அலசுவது ‘போலிசிடிரின்’ என்பதைப் பற்றிதான். திருமண விருந்துகளில் போலிசிடிரின் தட்டுகளைப் பயன்படுத்துவது குறைவுதான்; ஆனால் குவளைகள் பயன்படுத்துவர். உணவுக்கு முன் ஒரு குவளை, உண்ணும்போது இரு குவளை, உண்ண பின்னர் மீண்டும் ஒரு குவளை. அதிகமாக நீர் குடிப்பது ஆரோக்கியமான விடயம்தான். பாராட்டுக்கள். ஆனால், ஒவ்வொரு முறை நீரருந்துவதற்கும் வெவ்வேறு குவளைகளைப் பயன்படுத்துவர். முந்தையக் குவளைகளை வீசுவர் அல்லது உட்கார்ந்த இடத்திலேயே விட்டுவிடுவர். தான் பயன்படுத்திய குவளையைத் திரும்பப் பயன்படுத்துவதில் என்ன தரக்குறைவோ?


திருமணத்தைவிட்டு திருவிழாவிற்குச் சென்றால் ‘கொடுமை கொடுமைனு கோவிலுக்குப் போன’ கதைதான். இப்போது பெரும்பாலான கோவில் அன்னதானங்களுக்கு வாழையிலைப் பயன்படுத்துவதே இல்லை. போலிசிடிரின் தட்டும் குவளையும்தான். அதுவும் வீசுவதற்கு ஒரு பைக்கூட இருக்காது, ஏதாவது மரத்தடிதான் குப்பைமேடாகும். அந்தக் குப்பைகளை முறையாக அள்ளி கொட்டுவோரும் உண்டு, ஆற்றில் கொட்டுவோரும் உண்டு. போலிசிடிரினால் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் உணவு கடைகளிலும் பயன்பாட்டில் உள்ளன.


போலிசிடிரினால் உணவு பொட்டலங்கள் மட்டுமல்ல, விலையுயர்ந்த கண்ணாடி மற்றும் மின்சாரப் பொருட்கள் உடையாமலிருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதைத் தவிர குறுந்தகட்டின் கண்ணாடி போன்ற உறை, தீப்பிடித்தால் புகையை உணர்ந்து நீர் பாய்ச்சும் கருவி போன்ற பொருள்களும் செய்யப்படுகின்றன. இந்தப் போலிசிடிரின் தானாக அழிய நீண்ட நாட்களாகும். ஆனால் மறுபயனீடு செய்யலாம். மறுபயனீடு செய்யக்கூடிய போலிசிடிரினைக் கண்டறியப் படத்தில் உள்ள குறியீடு பொரிக்கப்பட்டிருக்கும்.


மேலும் போலிசிடிரின் பற்றி அலசினால் அது அறிவியல் சார்ந்ததாக நீளும். சொல்லவந்த கதைக்கு வந்து விடுகிறேன். போலிசிடிரினால் செய்யப்பட்ட உணவு தட்டுகள், குவளைகள், பொட்டலங்கள் ஆற்றிலும் கடற்கரையிலும் அதிகமான தூய்மைக்கேட்டை விளைவிக்கின்றன. நீர்வீழ்ச்சிகளில் குளிக்க செல்வோர்கள் கூட உணவெடுத்துச் சென்று அப்பொட்டலங்களையும் தட்டுகளையும் அங்கேயே வீசுகின்றனர். இந்த தூய்மைக்கேட்டைத் தவிற்கும் பொருட்டாக பினாங்கு மாநிலத்தில் போலிசிடிரின் பயன்பாட்டை 2011 சனவரி மாதம் முதல் தடை செய்யவுள்ளனர். நெகிழிப்பையின் பயன்பாட்டை குறைக்க நம் நாட்டில் நடவடிக்கை எடுத்த முதல் மாநிலமான பினாங்கே இதையும் துவக்குவது போற்றதற்குரிய விடயமாகும்.


ஆனால் இதில் வருத்தமளிக்கும் செய்தி ஒன்றும் உள்ளது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவின் போது இலவசமாக வழங்கப்படும் மற்றும் விற்கப்படும் உணவுக்காக சிலாங்கூரிலும் பினாங்கிலும் பயன்படுத்தப்பட்ட போலிசிடிரின் பொட்டலங்களின் எண்ணிக்கையை ஆய்ந்துள்ளது. சிலாங்கூரில் 630,000 மற்றும் பினாங்கில் 347,000 பொலிசிடிரின் உணவு தட்டுகளும் குவளைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது என்பது இங்கு சிந்திக்கவேண்டியது.


மாநில ரீதியில் பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை விருந்துண்ணச் செல்லும்போதும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போதும் செயலில் காட்டுவோம்.


0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates