ஞாயிறு, 25 ஜூலை, 2010

மண்ணுக்கும் விண்ணுக்கும்


நிலத்தையும் நிலத்தையும் இணைப்பதால் பாலத்தைப் பற்றிய கடந்த இடுகைக்கு மண்ணுக்கும் மண்ணுக்கும் என்று தலைப்பிட்டிருந்தேன். இதுவும் இன்னொரு பாலத்தைப் பற்றிய அலசல்தான். ஆனால் தலைப்பு சற்று முரண்படுவதாக நீங்கள் எண்ணலாம். இந்த இடுகையைப் படித்து முடிக்கும்போது காரணம் விளங்கும்.

இம்முறை கோல்டன் கேட் எனப்படும் பாலத்தைப் பார்ப்போம். இது அமெரிக்க நாட்டில் SAN FRANCISCO ஊரில் 1937 ஆம் ஆண்டு மே 17 இல் துவங்கப்பட்டப் பாலமாகும். துவங்கிய காலத்தில் உலகிலேயே அதிக நீளமான SUSPENSION SPAN கொண்ட பாலமாகும். பாலம் என்பது நிறைய வகையிலான அமைப்பு வகையைக் கொண்டுள்ளன. அவற்றைத் தமிழ்ப்படுத்துமளவுக்கு அடியேனின் தமிழ்ப்புலமை வலுபெறவில்லை. எனவே தவிர்க்கமுடியாதவற்றை ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன். ARCH BRIDGE, SUSPENSION BRIDGE, CABLE STAYED BRIDGE, BEAM BRIDGE, CANTILEVER BRIDGE, TRUSS BRIDGE என பட்டியல் நீண்டுகொண்டேப் போகிறது. இவற்றில் கற்களால் ஆன ஒரு ARCH BRIDGEஐ படத்தில் காணலாம்.

கோல்டன் கேட் பாலம் SUSPENSION வகை பாலமாகும். அதாவது இரண்டு பிரதான கோபுரங்கள் மட்டுமே அதிவலிமைபெற நிறுவப்படும். ஏற்கனவே வேறிடத்தில் பாலத்தின் பாதை அல்லது தளம் (SPAN) அமைக்கப்பட்டிருக்கும். அதனை இந்த கோபுரத்தினூடே தொங்கச்செய்ய வலுவான இரும்புக்கம்பிகள் (CABLE) பயன்படுத்தப்படும். கோல்டன் கேட்டில் பயன்படுத்தப்பட்ட கம்பிகளின் உதாரணத்தைப் படத்தில் காண்க.

எனவே, அப்பாலத்தின் முழு வலிமையும் அந்த கோபுரத்தையும் அதன் வழி இறங்கும் கம்பிகளையும் சார்ந்தே இருக்கும்.
இதில் வியப்பூட்டும் செய்தி யாதெனில் இப்பாலம் 1937 ஆம் ஆண்டே நிறுவப்பட்டதுதான். அப்போதே அந்தளவுக்கு தொழில்நுட்பம் அபார வளர்ச்சிபெற்றுள்ளது. உலகிலேயே அதிநீளமான SPAN கொண்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. SPAN என்றால் முதல் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடையிலான பாலத்தின் தளமாகும்.(அதற்கு கீழ் எந்தவொரு தூணூம் தாங்கிப் பிடிக்காது). மொத்தம் 2737 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்தில் தூண்களின் துணையின்றி மத்தியில் தொங்கும் SPANஇன் நீளம் மட்டும் 1280 மீட்டராகும். இந்த SPANஇன் நீளத்தை இன்றைய நாளில் வேறு பாலங்கள் முந்திவிட்டன. நம் நாட்டில் கூட பினாங்கு பாலத்தின் மத்தியப் பகுதி தூண்கள் இன்றி கோபுரங்கள் மூலம் இறங்கும் கம்பிகள் தாங்கிப் பிடித்திருப்பதைக் கவனிக்கலாம்.


கோல்டன் கேட் பாலம் ஒரு காரணத்துக்காக உலக நிலையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்செய்தி என் ஆர்வத்தையும் அதிகமாகத் தூண்டியது. நீங்களும் அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும். இப்பாலத்தைப் பல வேளைகளில் பனி மூட்டம் சூழ்ந்திருக்கும்.

பார்ப்பதற்கு ஏதோவொரு மர்மலோகத்தை நோக்கிச் செல்வது போல இருக்கும்.ஆனால் உண்மையாகவே இன்று உலகிலேயே அதிகமான தற்கொலைகள் இப்பாலத்தில்தான் நடக்கின்றன. தற்கொலைக்குப் புகழ்வாய்ந்த இடமாக வேறொரு இடம் திகழ்ந்தது. அதனை அடுத்த இடுகையில் நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் அந்த இடத்தை இந்தப் பாலம் இன்று முந்திவிட்டது. இப்பாலம் நீரிலிருந்து 75மீட்டருக்கு மேல் உள்ளது. அங்கிருந்து கடல் நோக்கி குதிக்கும் ஒருவர் மணிக்கு 122 கிலோமீட்டர் வேகத்தில் கடல் மேற்பரப்பை மோத நேரும். இது காரை(cement)தரையை மோதுவதற்குச் சமமாகும். அப்போது உடனடியான மரணம் உறுதியாக உண்டு. தப்பினாலும் நீரின் குளிர் தாங்காமலாவது நிச்சயம் இறப்பர். இந்த உடனடி மரணத்தின் காரணமாகவே அதிகமானவர் இப்பாலத்தில் வந்து தற்கொலை செய்து கொ(ல்)ள்கின்றனர்.


2005ஆம் ஆண்டு வரை மொத்தம் 1200 தற்கொலைகள் இப்பாலத்தில் நடந்துள்ளன. இன்றைய நாளில் வாரத்திற்கு சராசரி ஒரு தற்கொலை நடக்கிறது. அதிலும் பதிவில் இல்லாத; பிணம் கிடைக்காமல் போன தற்கொலைகள் எத்தனை என்று தெரியவில்லை.தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக இப்போது இப்பாலத்தில் இரவில் நடந்துசெல்லவும் மிதிவண்டியில் செல்லவும் அனுமதி கிடையாது. பகலில் முடியும். அப்படி இருந்தும் கூட சிலர் வாடகைக்கு வண்டி எடுத்தாவது பாலத்தின் மையப் பகுதிக்குச் சென்று குதிக்கின்றனர். அதையும் தவிர்ப்பதற்காகக் கடைசியில் பாலத்தின் கீழ்ப்பகுதியில் படத்திலுள்ளதுபோல வலைகள் கட்டியுள்ளனர்.

இது பாதுகாப்புக்காக என்றாலும் அப்பாலத்தின் அழகைக் கெடுப்பதாகச் சிலர் எண்ணுகின்றனர். இப்பாலத்தில் தற்கொலை செய்பவர்களைப் பற்றி ‘the bridge' என்றவொரு செய்திப்படம் எடுத்தனர். அதில் உண்மையான 23 தற்கொலைகளை இரகசியக் கேமராக்கள் மூலம் படம் பிடித்துள்ளனர். இப்பாலத்தில் வந்து குதிக்க எண்ணுபவர்களின் மனம் கடைசி வேளையிலாவது மாறும் அல்லது மாற்றலாம் என்ற நம்பிக்கையில் பாலம் நெடுக்க ஆங்காங்கே இலவச பொது தொலைபேசிகளும் உள்ளன.அதையும் தற்கொலைகள் நிகழும் இடங்களையும் படத்தில் காண்க.


எது எவ்வாறானாலும் தற்கொலைக்கு இப்பாலம்தான் இன்று உலகிலேயே முதலிடம் வகிக்கின்றது.இப்பாலம் மண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமல்ல விண்ணுக்கும் கூட தொடர்புபடுத்தும். (இப்பாலம் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சில காட்சிகளில் வரும்)

2 comments:

Unknown சொன்னது…

nice post. keep posting such articles

Unknown சொன்னது…

தங்களது கருத்துக்கு நன்றி.

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates