சனி, 21 ஆகஸ்ட், 2010

கோபே-இவாயா



உலகத்திலேயே அதிகமானோர் தற்கொலை செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளும் பாலமான கோல்டன் கேட் பாலமானது கட்டி துவங்கப்பட்ட காலத்தில் (1937)உலகிலேயே நீளமான SUSPENSION வகை பாலமாக விளங்கியது. அதன் பின்னர் அவ்வகையைச் சார்ந்து அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இன்று உலகிலேயே நீளமான SUSPENSION பாலமாக ஜப்பானிலுள்ள அகாஷி கேய்க்யோ பாலம் விளங்குகிறது. இப்பாலத்தைச் செல்லமாக முத்துப் பாலம் (PEARL BRIDGE) என்றும் அழைப்பர். 1998இல் துவங்கப்பட்ட இப்பாலம் கோபே நகரிலிருந்து அகாஷி நீரிணையைக் கடந்து அவாஜி தீவிலுள்ள இவாயா நகரை இணைக்கின்றது.(புரிஞ்ச மாதிரி இருக்குதா?)


ஆரம்பகாலத்தில் இவ்விரு நிலங்களையும் இணைக்க படகு (ferry) சேவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்நீரிணைப் பகுதி அடிக்கடி கடும் புயல்காற்று பயணிக்கும் வழியில் அமைந்துள்ளதால் 11 மே 1955 இல் இரு பயணப்படகுகள் மோதி மூழ்கும் நிலைக்காயின. அதில் பலியான 168 பேரில் நூறுக்கும் மேலானோர் பள்ளி மாணவர்களாவர். இச்சம்பவம் அகாஷி பாலம் அமைவதற்கு முக்கியக் காரணமாகும்.



298மீட்டர் உயரமுடைய இரு கோபுரங்களின் மத்தியில் அமையப்பெற்றிருக்கும் மத்தியத்தளம் (span) 1991 மீட்டர் நீளமுடையது. கிட்டதட்ட 2 கிலோமீட்டர் நீளமுடைய இந்த தளத்தின் கீழ் எந்தவொரு தூண்களும் கிடையாது. பலத்த கடலலைகள், 8.5 ரிட்சர் ஸ்கேல் வரையிலான நிலநடுக்கம், மணிக்கு 286 கிலோமீட்டர் வரை வீசும் பலத்த காற்று அனைத்தையும் தாங்கி சற்றும் அசராமல் நிற்கக்கூடிய வலிமையுடன் இப்பாலத்தை வடிவமைத்துள்ளனர். அதிகமான இயற்கை பேரிடர்களைச் சந்திக்கும் ஜப்பான் நாட்டினர்தான் இப்படி சவாலுக்குரிய கட்டடங்களைத் துணிவோடு நிர்மாணிக்கிறார்கள். 3911 மீட்டர் மொத்த நீளமுடைய இப்பாலம் வெப்பத்தால் மேலும் இரண்டு மீட்டர் வரை விரியவும் சுருங்கவும் செய்யும். ஆரம்பத்திட்டத்தில் தொடர்வண்டித் தண்டவாளங்களையும் இணைக்க எண்ணி சரிவராமல் அதன்பின்னர் 6 வழிப்பாதைகளைக் கொண்டுள்ள இப்பாலம் 10 ஆண்டுகள் உழைப்பின் பலனாக 5 ஏப்ரல் 1998 இல் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

2 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates